/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் திருக்குறள் விழா
/
சிங்கப்பூரில் திருக்குறள் விழா

சிங்கப்பூரின் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்திய திருக்குறள் விழா மிகச் சிறப்பாக நடந்தது. இந்த ஆண்டு நிகழ்ந்த திருக்குறள் விழா, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தொடர்ந்து நடத்திய 38ஆவது திருக்குறள் விழா என்பது குறிப்பிடத்தக்கது.
மழலையர் பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறளை மனனம் செய்து ஒப்பித்தல், இருவர் இணைந்து குறள் பற்றிப் பேசுதல், சொந்தமாகக் குறள் இயற்றுதல் முதலிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 16ஆம்தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தகுதி வாய்ந்த நடுவர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இப்போட்டிகளில் ஏறக்குறைய தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றமை தமிழ்மொழி பண்பாட்டுக் கழக வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையாகும்.
அரங்கம் முழுதும் நிரம்பி வழிந்த பார்வையாளர்களுடன் ஏப்ரல் 5ஆம்தேதி 4:30மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவில் மாணவர்கள் கலந்து கொண்ட திருக்குறள் விழாப் போட்டிகள் மற்றும் நடுவர்கள் பற்றிய விபரங்கள் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை வழங்கிய தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி விழாவினைச் சிறப்பிக்க வந்திருந்த அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்ததோடு தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் கூடியிருந்து கண்டு களிக்கும் வகையில் ஒரு பெரிய அரங்கத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் கட்டித் தர வேண்டுமென்று வேண்டுகோளையும் விடுத்தார்.
சிறப்பு விருந்தினராகச் செம்பவாங்குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம்நாயர் சிறப்புரை வழங்கினார். தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தமிழ்த் தொண்டினையும் சமூக சேவைகளையும் வெகுவாகப் பாராட்டிய விக்ரம் நாயர் திருக்குறள் விழா 2025ற்கு நல்லாதரவு வழங்கிய புரவலர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்புச் செய்தார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் 2025ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினையும் ஐந்து சவரன் தங்கப் பதக்கத்தையும் தமிழ் ஆர்வலரும் சமூக சேவகரும் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநருமான சாந்தி செல்லப்பனுக்கு வழங்கப்பட்டது. தமது கல்விப் பணி மற்றும் சமூகப் பணி என்பது தமது தனிப்பட்ட முயற்சி மட்டும் இல்லை என்றும் அவை அனைத்திலும் தமது குழு உறுப்பினர்களின் பங்கும் அதிக அளவில் உள்ளன என்றும் கூறிய அவர் அவ்விருதினைத் தமது குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.
திருக்குறள் விழா 2025 இன் சிறப்பு அங்கமாகத் தன்முனைப்புப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா 'செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இன்றைய ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதனின் இயற்கை நுண்ணறிவு மூலம்தான் உருவாக்கப்பட்டது என்றும் கூறிய அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தமது திருக்குறளில் அக்கருத்துகளைப் பொதிந்து வைத்துள்ளார் என்று அவற்றைச் சான்றுகளோடு விளக்கினார். இயந்திரமயமான செயற்கை நுண்ணறிவை விட மனிதாபிமானம் மிக்க மானுடப் பண்புகள் மிகுந்த மனிதனின் இயற்கை நுண்ணறிவே மேலானது என்பதே திருக்குறள் நமக்கு உணர்த்தும் அறம் என்று முத்தாய்ப்பாகப் பேசி சிறப்புரையை நிறைவு செய்தார். கருத்தாழமும் சிந்தனை ஆக்கமும் நகைச்சுவையும் ஒரு சேர அமைந்த அவரது சிறப்புரை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து திருக்குறள் விழா 2025 போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த 109 மாணவர்களுக்கும் திருக்குறள் விழா 2025க்கு நல்லாதரவு வழங்கிய புரவலர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
திருக்குறள் விழா 2025இன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான மாணிக்கவாசகம் சக்கரவர்த்தி மற்றும் இசக்கிப் பாண்டியன் குருசாமியின் நன்றி நவிலல் நிகழ்வுடன் திருக்குறள் விழா 2025 இனிதே நிறைவேறியது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement