
வே.ஹேமா, முகுந்தநல்லுார், விருத்தாச்சலம்.
*பசுவும் கன்றும் எதிரில் வந்தால்...
இதை பார்ப்பது நல்ல சகுனம். நினைத்தது நிறைவேறும்.
கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதுார், கன்னியாகுமரி.
*சரியை, கிரியை வேறுபாடு என்ன?
கோயிலை துாய்மைப்படுத்துதல், பூக்கள் தொடுத்து பூஜைக்கு கொடுத்தல் போன்ற செயல்கள் சரியை. மந்திரம் ஜபித்தல், தியானம், தவம் முதலியன கிரியை.
வி.கந்தன், மானுார், திருநெல்வேலி.
*அரசமரத்தை அகற்றி விட்டு மண்டபம் கட்ட விரும்புகிறோம். செய்யலாமா...
வழிபாட்டில் உள்ள அரச மரத்தை வெட்டக் கூடாது. வழிபடாத மரமாக இருந்தால் பரிகாரமாக பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பின் வெட்டலாம். அதை கோயிலுக்கு தானமாக கொடுங்கள்.
அ.காமாட்சி, திருமுருகன்பூண்டி, திருப்பூர்.
*ஜுரதேவருக்கு மிளகு ரசம் படைப்பது ஏன்?
மிளகு ரசம் படைத்து வழிபட ஜுரம் நீங்கும். மனம், உடல் பலம் பெறும்.
க.பரணிபாரதி, ஆவடி, திருவள்ளூர்.
*கோயில் சுவருடன் ஒட்டிய வீட்டில் குடியிருக்கலாமா?
குடியிருக்க வேண்டாம். கோயில் சுவரை ஒட்டி வீடு கட்டக்கூடாது. இதுவும் ஆக்கிரமிப்பால் நேரும் தவறுதான்.
எஸ்.ராமரத்தினம், சோழவந்தான், மதுரை.
*முதுமையால் திருப்பதி செல்ல முடியவில்லை. நேர்த்திக்கடனை எப்படி செலுத்துவது?
காணிக்கையை யார் மூலமாவது செலுத்துங்கள். முடி காணிக்கை செலுத்த வேண்டி இருந்தால் பெருமாள் கோயிலில் செலுத்தி விட்டு, திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொள்ளுங்கள்.
எம்.முத்துக்குமார், டில்லி.
*காசியில் வாங்கிய ஸ்படிக லிங்கம் உடைந்து விட்டது. என்ன செய்யலாம்?
சிறியதாக உடைந்திருந்தால் சரிசெய்து பூஜிக்கலாம். முடியாவிட்டால் புதிய லிங்கம் வாங்கி பூஜியுங்கள்.
எஸ்.ரவி, ராமமூர்த்திநகர், பெங்களூரு.
*சிலர் விபூதியை பூச்சிக்கடிக்கு பூசுகிறார்களே...
'நோய் தீர்க்க வல்லது திருநீறு' என்கிறது திருநீற்றுப் பதிகம். பசுவின் சாணத்தில் செய்த திருநீறு மருந்தாகவும் உள்ளது.
எஸ்.நடராஜன், திருப்புவனம், சிவகங்கை.
*கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை வீட்டில் சேர்த்து வைக்கலாமா?
சேர்த்து வைக்கலாம். குடும்பத்தினர் அனைவரும் தினமும் நெற்றியில் பூசுவது மிக அவசியம்.
ஏ.பரசுராம், கோடம்பாக்கம், சென்னை.
*புதையுண்ட சிவலிங்கத்தை வழிபடலாமா...
புதையுண்ட சிவலிங்கத்தை வழிபடுவது புண்ணியம். கோயில் கட்டுவது சிறப்பு.

