'இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'மூடுபனி' என்ற படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலாவே' என்ற பாடல் இன்றைக்கும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் காப்புரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சில திரைப்படங்களில் இந்த பாடல் பயன்படுத்தப்படுவதற்கு இளையராஜா அனுமதி வழங்கி இருந்தார். இதை எதிர்த்து சரிகம இந்தியா லிமிடெட், டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தது. அதில், ஒரு தமிழ் திரைப்படத்தில் எங்களிடம் அனுமதி பெறாமல் இளையராஜாவிடம் அனுமதி பெற்று 'என் இனிய பொன் நிலாவே பாடல்' மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது, என்று தெரிவித்திருந்தது.
என் இனிய பொன் நிலாவே பாடல் காப்புரிமையை இளையராஜா கேட்க முடியாது என்று கடந்த 21ம் தேதி நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக இளையராஜா, டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தக்ளுபடி செய்தது.