/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குவாரிகளால் சமூக காடுகள் அழியும்...அபாயம்: இயற்கை வளங்கள் பாதிப்பதாக கவலை
/
குவாரிகளால் சமூக காடுகள் அழியும்...அபாயம்: இயற்கை வளங்கள் பாதிப்பதாக கவலை
குவாரிகளால் சமூக காடுகள் அழியும்...அபாயம்: இயற்கை வளங்கள் பாதிப்பதாக கவலை
குவாரிகளால் சமூக காடுகள் அழியும்...அபாயம்: இயற்கை வளங்கள் பாதிப்பதாக கவலை
ADDED : மார் 25, 2025 09:51 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பகுதியில் உள்ள கல் குவாரிகளால், வனத்துறை உருவாக்கிய சமூக காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க, சமூக காடுகளின் அருகே, கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என, உத்திரமேரூர் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தின் கீழ், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய வனச் சரக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரம் வன கோட்டத்தில் 48,000 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடுகள் உள்ளன.
இதேபோல, ஊராட்சிகளில் உள்ள புறம்போக்கு நிலம், ஏரிக்கரை, சாலையோரம் ஆகிய பகுதிகளில் மரங்களை நட்டு சமூக காடுகள் உருவாக்க, தமிழக அரசின் வனத்துறை பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, 1981ம் ஆண்டில், ஸ்வீடன் பன்னாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியுடன், சமூக காடுகள் உருவாக்குவது தொடங்கப்பட்டது. அதுமுதல், ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பசுமையான சூழலில் வசிக்கவும், நல்ல மழைப்பொழிவை பெறவும் சமூக காடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தரம் குன்றிய வனப்பகுதிகள் மற்றும் தரிசு நிலங்களில் வனச்சூழலை ஏற்படுத்த சமூக காடுகள் உதவுகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் வனச் சரகத்தில், 16,800 ஏக்கர் பரப்பளவும், உத்திரமேரூர் வனச் சரகத்தில், 31,200 ஏக்கர் பரப்பளவும், ஸ்ரீபெரும்புதுார் வனச் சரகத்தில், 24,000 ஏக்கர் பரப்பளவு சமூக காடுகள் உள்ளன.
தற்போது, காஞ்சிபுரம் வனச் சரக எல்லையில் உள்ள சமூக காடுகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சமூக காடுகள் அருகே உத்திரமேரூர் பகுதியில் செயல்படும் பல்வேறு கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக கல் குவாரிகள் அமைக்க, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அதில், பல தனியார் நிறுவனங்களுக்கு கல் குவாரி தொடங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
ஆனால், கல் குவாரி தொடங்க அனுமதி அளித்தும், குவாரி அமையும் இடத்தில் இருந்து சாலைக்கு வாகனங்கள் வர போதிய பாதை வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், சமூக காடுகள் வழியே வாகனங்கள் செல்லும் பாதை அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அவ்வாறு பாதை அமைப்பதால், நிழல் மற்றும் மழைப்பொழிவை தரக்கூடிய மரங்கள் அழிந்து, சமூக காடுகளின் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், நீர்நிலை பகுதிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த, மாம்புதூரில் கல் குவாரி துவங்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத் துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.
இதுகுறித்து, மாம்புதுார் கிராம மக்கள் கூறியதாவது:
குவாரி நிலத்துக்கு வாகனங்கள் செல்ல பட்டா நிலம் இல்லாததால், அரசு நிலத்தை பயன்படுத்தவும், சமூக காடுகள் திட்டத்திற்கு தடையாகவும், குவாரி அமைப்போர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி அளிப்பதால், சமூக காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதனால், இயற்கை சூழல் குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். கால்நடைகளின் மேய்ச்சலுக்கு போதிய இடம் இருக்காது. சமூக காடுகளின் பரப்பளவை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கல் குவாரிகள் தொடங்க, வேறு இடத்தில் அனுமதி அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.