/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வடமாநில தொழிலாளி பலி அசுத்தமான குடிநீர் காரணமா?
/
வடமாநில தொழிலாளி பலி அசுத்தமான குடிநீர் காரணமா?
ADDED : ஜூன் 23, 2024 09:32 AM
ஓசூர், : ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திர சமத், 40. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இரு நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.
ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டு, சின்ன எலசகிரி அம்பேத்கர் நகர், சின்ன பழனியப்பா நகர், அண்ணா நகரை சேர்ந்த, 75க்கும் மேற்பட்டோர் சில நாட்களுக்கு முன், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். இதில், சின்ன பழனியப்பா நகரில் வசித்த, அசாம் மாநில பெண் சில்பிதாஸ், 20, வயிற்றுப்போக்கால் கடந்த, 13ல் உயிரிழந்தார். தற்போது, சுரேந்திர சமத் இறந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கும் அசுத்தமான குடிநீர் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போலீசாரிடம் கேட்டபோது, 'சுரேந்திர சமத், 10 நாட்களுக்கு முன் தான், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்துள்ளார். அவர் இறைச்சி சாப்பிட்டது ஜீரணமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்' என்றனர்.