வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம்
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்ட பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தை பக்தர்கள் மேற்கொண்டனர்.
வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது.
திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கி 13 கி.மீட்டர் துாரஆன்மிக நடைபயணம் செல்லுகின்றனர். நேற்று மாலை 6:00 மணியளவில் 54வது மாத ஆன்மிக நடைபயணம், கோவில் வளாகத்தில் துவங்கி நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற விநாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைகின்றனர். திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ஆலய பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.