திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சம்ப்பரோஷனம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சம்ப்ரோஷணத்தில் திரளான பக்தர்கள் குவிந்து, கோவிந்தா கோஷம் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
நடுநாட்டு திருப்பதி என அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் நுழைவு வாயில் ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் என அழைக்கப்படும் வடக்கு ராஜகோபுரம், பிரதான சன்னதிகள் மற்றும் விமானங்களுக்கு ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ரோட்சணம் இன்று காலை நடந்தது.
முன்னதாக காலை 6:00 மணிக்கு அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், பிரதான ஹோமங்கள், மகாபூர்ணாக்குதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்கள், மூலஸ்தான விமானங்களுக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்டை புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோவ்சனம் நடந்தது.
வணிகவரி, பதிவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு மேற்பார்வையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் தலைமையில் 700க் கும் மேற்பட்ட போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பக்தர்களின் கூட்டத்தில் திக்கித் திணறிய திருக்கோவிலூர்; கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மார்க்கத்தில் இருந்து வரும் பாஸ்கல் அனைத்தும் புறவழிச் சாலை வழியாக மணம்பூண்டியை சுற்றிக் கொண்டு பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் மற்றும் பல்வேறு இடங்களில் பக்தர்களின் வசதிக்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை தயார் நிலையில் இருந்தனர். காலை 6:00 மணியிலிருந்தே பக்தர்களின் கூட்டம் நகர் முழுவதும் அலைமோதியது. போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். என்றாலும் கட்டுக்கடங்காத கூட்டம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் குவிந்திருந்து, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும் வைபவத்தை கண்டு ஆயன் அருளை பெற்றனர்.