திருப்புத்தூர் ஆதீனமிளகி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
திருப்புத்தூர்; திருப்புத்தூர் தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
இக்கிராமத்தில் புரவி எடுப்பை முன்னிட்டு ஜூன் 19ல் பிடிமண் கொடுக்கப்பட்டு புரவி எடுப்புத் திருவிழா பணிகள் துவங்கியது. தொடர்ந்து ஜூன் 26ல் கோயில் முன்பு சேங்கை வெட்டுதல் நடந்தது. பின்னர் கிராமத்தினர் கூடி தென்மாப்பட்டு சின்னையா கோயிலில் இருந்து சுவாமி அழைத்துக் கொண்டு, கண்டரமாணிக்கம் சாலை, பூமாயி அம்மன் கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு வழியாக புதுப்பட்டி சென்றனர். புதுப்பட்டி புரவி பொட்டலுக்குச் சென்று அங்கிருந்த புரவிகளுக்கு தீபராதனை நடந்தது.
பின்னர் மேளதாளங்களுடன் புரவிகளை தோளில் சுமந்து கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சாமி ஆட்டத்துடன் ஊா்வலமாக புரவிகளை சுமந்து வந்து, தென்மாபட்டு புரவி பொட்டலில் சேர்த்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள், பொதுமக்கள், பக்தர்கள் புரவிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் மாலை சின்னையா கோயிலில் இருந்து சாமி அழைக்கப்பட்டு சாமியாடிகள் புறப்பட்டு வந்தனர். பின்னர் தென்மாப்பட்டு புரவி பொட்டலில் உள்ள புரவிகளை ஆதீனமிளகி அய்யனார், கிருஷ்ணப்ப அய்யனார், வாணியம்பட்டி அய்யனார் கோயில்களுக்கு கொண்டு சேர்த்தனர். நேர்த்திக்கடன் ஆக சின்ன புரவிகளையும்,பொம்மைகளையும் கொண்டு சென்றனர். சுற்று வட்டாரக்கிராமத்தினர் புரவி எடுப்பில் பங்கேற்றனர்..