பெண்கள் மட்டும் வடம் பிடிக்க உலா வந்த திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர்
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் கோவலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெண்களால் வடம் இழுக்கப்பட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 5ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் கோவில் கொழுமண்டபத்தில் சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், தினமும் காலை இரவு சிறப்பு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மேல வாத்தியங்கள் முழங்க பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பெண்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என கூறி தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27- வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் ஐயாறப்பர் கோவில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பணியாளர்கள் செய்து இருந்தனர்.