மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள மீனாட்சி அம்மாள் உடனுறை திருவெண்காட்டீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மீனாட்சி அம்மாள் உடனுறை திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்று, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ ஸ்தலமாக உள்ளது. மதுராந்தக சோழனின் திருத்தலமாக இருந்து வருகிறது. இக்கோவிலில் கடந்த, மே 20ஆம் தேதி வைகாசி விசாக பிரமோத்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.வைகாசி பிரம்மோத்சவத்தின் முக்கிய விழாவான நேற்று தேர் திருவிழா நடந்தது.வெண்காட்டீஸ்வரர் – மீனாட்சி அம்மனும், தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதே போல் வள்ளி – தெய்வானையுடன் முருகனும் தேரில் வலம் வந்தனர்.அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, திரளான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய, சிவ சிவா’ என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தது.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் அறங்காவலர் குழுவினர், செய்திருந்தனர்.