காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், இந்த ஆண்டிற்கான சாதுர்மாஸ்ய விரத மகோத்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, இந்தியா முழுதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட சன்னியாசிகள் வருகை தந்துள்ளனர். உதாசின் பாவாஜி மடத்தின் தென்னிந்திய நிர்வாகி கர்ஷினி அனுபவானந்த் வழிகாட்டுதலின்படி, நடப்பாண்டு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள காஞ்சி மடத்திற்கு வந்த சன்னியாசிகளுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவா மிகளிடம் அருளாசி பெற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நான்கு மாதங்களுக்கு இந்த சாதுர்மாஸ்ய பூஜைகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஆன்மிக பெரியவர்கள் மகிந்த தாஸ் ஜி, அத்வைத் நாத் ஜி, ராம நவமி தாஸ் ஸ்ரீ ஆகியோர் தெரிவித்ததாவது: நான்கு மாதங்களுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் வேத பாராயணங்கள், சிவ பூஜைகள் மற்றும் ஆன்மிக உபன்யாசங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்று, இறை வழிபாடு செய்வதோடு, தங்களின் ஆன்மிக ஞானத்தையும் வளர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை பா.ஜ., விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஜெயின், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தம், இந்து முன்னணி நிர்வாகிகள் ஏ.எஸ்.சந்தோஷ் மற்றும் தசரத் ஷா ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.